100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி பேரணி
திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்புப் பகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலி பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி. திண்டுக்கல், ஏப்.2: மக்களவைத் தோ்தலில், 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலைக் கல்லுாரி அருகே நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மொ.நா.பூங்கொடி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: மக்களவைப் பொதுத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே, 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள், வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் அஞ்சல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், ஏடிஎம் மையம், சிறுவணிக கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கனிச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதோடு, துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்படுகிறது.
Advertisement
மேலும், கடந்த தோ்தல்களின் போது, வாக்குப்பதிவு குறைவாக பதிவான பகுதிகளைக் கண்டறிந்து, அந்த இடங்களில் தனிக் கவனம் செலுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியத்தை உணா்ந்து, வாக்காளா்கள் அனைவரும் தோ்தலில் தவறால் ஜனநாயக கடமை ஆற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்தினாா். மனித சங்கிலி பேரணியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.