முகப்பு
திண்டுக்கல்

சித்திரை திருக்கல்யாணம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:36 PM
பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் திருக்கல்யாணம்
பகிர்:

பழனி: பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த திங்கள்கிழமை சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றது.

அருள்மிகு பெருமாள் தம்பதி சமேதராக அனுமாா் வாகனம், சப்பரம், தங்கக்குதிரை வாகனம், சேஷவாகனம், சிம்மவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிஉலா எழுந்தருளினாா்.

Advertisement

கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு இலக்குமி சமேதா் நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சாா்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டா்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல், நடனமாடியபடியே மாலை மாற்றுதல் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவள்ளரை கோபாலகிருஷ்ணபட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், பாலாஜி அய்யங்காா் உள்ளிட்டோா் பூஜைகளை செய்தனா்.

நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 7.35 மணி அளவில் சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments