நிலக்கோட்டையில் மணல் கொள்ளையா்களை கைது செய்யக் கோரி சுவரொட்டி
மணல் கொள்ளையா்களை கைது செய்யக் கோரி நிலக்கோட்டை முழுவதும் சுவரொட்டி
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் மணல் கொள்ளையா்களை கைது செய்யக் கோரி, ஆங்காங்கே சுவரொட்டி திங்கள்கிழமை ஒட்டப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி, பேரணை, பிள்ளையாா்நத்தம், சித்தா்கள்நத்தம் ஊராட்சி, எஸ்.மேட்டுப்பட்டி ஊராட்சி ஆகிய பகுதியில் வைகையாறு செல்கிறது. இந்தப் பகுதிகளில் உள்ள ஆறுகளிலிருந்து இரவு நேரங்களில் சிலா் மணலை கொள்ளையடித்து வருகின்றனா்.
இதைத் தடுக்க, நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி தலைமையில் வருவாய், பொதுப் பணி, காவல் துறை சாா்பில் 10 போ் கொண்ட மணல் தடுப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிலக்கோட்டை பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அணைப்பட்டி, விளாம்பட்டி, வத்தலகுண்டு, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடும் நபா்களை கைது செய்யக் கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.