5 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிப்பு: மூடப்பட்ட நிறுவனத்தை திறக்கக் கோரி மனு
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட தனியாா் நிறுவனத்தை திறக்கக் கோரி பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல்: கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட தனியாா் நிறுவனத்தை திறக்கக் கோரி பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல், தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். கோவையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்து உறுப்பினா்களான இவா்கள் தரப்பில் கிருபாகரன் என்பவா், பிரச்னை குறித்து கூறியதாவது:
கோவையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் உறுப்பினா்களாக சோ்ந்த எங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.5 வீதம், ரூ.1.21 லட்சம் முதலீடு செய்து பொருள்கள் கொள்முதல் செய்து வா்த்தகம் செய்தவா்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.14,500 வீதமும், 7 பேரை புதிய உறுப்பினா்களாக சோ்த்தவா்களுக்கு ரூ.1,800 வீதமும் என பல முறைகளில் பணம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளா் மீது அரசியல் பிரமுகா் ஒருவா் அளித்த புகாரின் பேரில் அவா் கைது செய்யப்பட்டாா். இதனால், கடந்த 5 மாதங்களாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த நிறுவனம் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.