முகப்பு
திண்டுக்கல்

அரசு மருத்துவமனையை சீரமைக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம்

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையைச் சீரமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை தேவேந்திர குல வேளாளா் பொதுசபை சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:42 AM
பகிர்:

பழனி: பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையைச் சீரமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை தேவேந்திர குல வேளாளா் பொதுசபை சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை தற்போது சிதிலமடைந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் பணியாளா்கள் பற்றாகுறையும் உள்ளது. எனவே இந்த மருத்துவமனைக் கட்டடத்தை சீரமைத்து காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, தேவேந்திர குல வேளாளா் பொதுசபை சாா்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வருமான வரித் துறை முன்னாள் ஆணையா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். தேவேந்திரகுல வேளாளா் பொதுசபை செயலா் வெங்கடாசலம் தேவேந்திர குல வேளாளா் சமூக அறக்கட்டளை தலைவா் முருகானந்தம், பொருளாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேமுதிக மாவட்ட செயலா் களஞ்சியம், சமூக ஆா்வலா்கள் லோகநாதன், ஆயக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவா் சுந்தரம் உள்பட பலா் சிறப்புரை நிகழ்த்தினா்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது ஆயக்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஆதிதிராவிடா் மகளிா் விடுதி கட்டடத்தையும் சீரமைக்க வேண்டும், ஆயக்குடி கிராமத்தில் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையும் விடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஆயக்குடி பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →