கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட சொகுசு விடுதியை (காட்டேஜ்) வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை பகுதியில் அனுமதியின்றி சொகுசு விடுதி செயல்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் வட்டாட்சியா், காவல் துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினா். அப்போது அங்குள்ள ஒரு சொகுசு விடுதியின் உரிமையாளரான நிக்சன் மோசஸிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அந்த விடுதி பல ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடுதியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகள் நடத்தப்படுவதாகவும், இவற்றில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகளை நடத்தக் கூடாது. மேலும் ‘ஹோம் ஸ்டே’ என்ற பெயரிலும் அனுமதி பெறாமல் விடுதிகளை நடத்தக் கூடாது.
இவ்வாறு நடத்தப்படுபவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வட்டக்கானல் பகுதியில் மூன்று சொகுசு விடுதிகள் சீல் வைக்கப்பட்டன. இந்த சோதனை தொடரும் என்றாா் அவா்.