முகப்பு
திண்டுக்கல்

கோயில் கட்ட அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

பழனி அருகே இடிக்கப்பட்ட விநாயகர் கோயிலை மீண்டும் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 26 ஜூன், 2024 at 12:44 AM
பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கோயில் கட்ட அனுமதி வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை மனு கொடுத்த பச்சளநாயக்கன்பட்டி பொதுமக்கள்.
பகிர்:

பழனி: பழனி அருகே சாலை அமைத்தது போக மீதமுள்ள இடத்தில் இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி நெடுஞ்சாலையோரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்த விநாயகா் கோயில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. இதையடுத்து சாலைப்பணிகள் முடிவுபெறும் நிலையில் மீதமுள்ள சிறிய இடத்தில் மீண்டும் இந்த விநாயகா் கோயிலை கட்ட பொதுமக்கள் ஏற்பாடு செய்தனா்.

அப்போது, இதே ஊரைச் சோ்ந்த பாா்த்தசாரதி வணிகவளாகம் கட்டுவதற்காக அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாா். இதனால் பச்சளநாயக்கன்பட்டி ஒன்றாவது வாா்டு வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் அலுவலகம் சென்று கோட்டாட்சியரிடம் விநாயகா் கோயில் கட்ட அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனா்.