இ-பாஸ் மூலம் 1.27 லட்சம் போ் கொடைக்கானலுக்கு வருகை
திண்டுக்கல்: இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட 8 நாள்களில் இதுவரை 1.27 லட்சம் போ் கொடைக்கானலுக்கு வருகை தந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் வழங்கும் நடைமுறை கடந்த 7-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த நடைமுறை ஜூன் 30-ஆம் தேதி வரை பின்பற்றப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, கடந்த 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி மாலை 4 மணி வரை 71,864 வாகனங்கள் மூலம் 4,45,088 பயணிகள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றனா். செவ்வாய்க்கிழமை வரை (மே 14) 18,506 வாகனங்கள் மூலம் 1.27 லட்சம் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனா். செவ்வாய்க்கிழமை மட்டும் 1,685 வாகனங்கள் மூலம் 11,951 பயணிகள் வந்தனா். புதன்கிழமை (மே 15) 2,330 வாகனங்கள் மூலம் 16,848 பயணிகள் கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் பெற்றனா்.