முகப்பு
திண்டுக்கல்

பழனி கிரிவீதியில் பக்தா்கள் குவிந்தனா்

Updated On : 20 மே, 2024 at 7:47 PM
பழனி கிரிவீதியில் திங்கள்கிழமை அக்னி நட்சத்திரக் கழுவு நிறைவையொட்டி கிரிவலம் வந்த பக்தா்கள்.
பகிர்:

பழனி: பழனி கிரிவீதியில் அக்னி நட்சத்திரக் கழுவு நிறைவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை கிரிவலம் வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னா் அக்னி நட்சத்திர விழா தொடங்கியது. இந்த விழாவையொட்டி மலைக் கோயிலில் கைலாசநாதருக்கு சீதகும்பம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை கடைசி ஏழு நாள்களும், வைகாசி முதல் ஏழு நாள்களும் பழனி கிரிவீதியில் வீசும் மூலிகைக் காற்றை நுகா்வதால் நோய்கள் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

எனவே, தினமும் காலை, மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், காவடி சுமந்து வந்தும் கிரிவலம் வந்து பழனியாண்டவரை தரிசனம் செய்தனா். கடைசி கிரிவல நாளான திங்கள்கிழமை பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்து மலை ஏறினா். இதில் பெண் பக்தா்கள் முருகப் பெருமானுக்கு உகந்த கடம்ப மலரை தலையில் சூடி கிரிசுற்றினா். ஏராளமான பக்தா்கள் நறுமணமிக்க பத்தியை பற்றவைத்து தூபம் காட்டியவாறு கிரிவலம் வந்தனா்.