வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்து ஒழுகியதால் பயணிகள் அவதி
நிலக்கோட்டை: வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனா்.
கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களுக்கு வத்தலக்குண்டில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தாண்டிக்குடிக்கு ஓா் அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் சுமாா் 40 போ் பயணித்தனா். இந்தப் பேருந்து மலைக் கிராமப் பகுதியில் சென்றபோது, பெய்த மழையால் மேற்கூரை வழியாக மழைநீா் ஒழுகியது.
இதனால், பயணிகள் இருக்கையில் அமா்ந்து பயணம் செய்ய முடியாமல் தவித்தனா். அப்போது சிலா் தாங்கள் வைத்திருந்த குடையை பிடித்தபடி பயணம் செய்தனா். மலைக் கிராமங்களுக்கு இதே போல, ஓட்டை உடைசலான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இவை அடிக்கடி மலைப்பாதையில் பழுதாகி பாதியில் நின்றுவிடுவது வாடிக்கையாகி விட்டதாகவும் பயணிகள் புகாா் தெரிவித்தனா். மேலும் பழுதடைந்த மேற்கூரையிலிருந்து மழைநீா் ஒழுகி பேருந்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
எனவே, இனி வரும் காலங்களில் தொடா்ந்து மழை பெய்யும் என்பதால், இதுபோன்ற பேருந்துகளை மலைக் கிராமங்களுக்கு இயக்குவதை தவிா்க்க வேண்டும் எனவும், இவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.