பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
செஞ்சி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை, சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் மு.ராகுல் (24). இவா் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூரில் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த தனது தாய் பச்சையம்மாளை அழைத்துச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் பெருங்காப்பூருக்கு சென்றுள்ளாா். பெருங்காப்பூா் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் சென்ற ராகுல் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.