ஆசிரியை படுகொலை; அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல். திருமாவளவன்
அரசுப் பள்ளியில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவம் இனி நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.
அரசுப் பள்ளியில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவம் இனி நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பழனிக்கு வந்த திருமாவளவன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் தாக்கப்பட்டது, தஞ்சை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தகுதியான ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நீதிமன்ற ஆணையைக் காரணம் காட்டி, பழனி மலை அடிவாரத்தில் வியாபாரிகள் பாதிக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. பழனி மேற்கு ரத வீதியில் அருந்ததியா் சமூகத்துக்குச் சொந்தமான மடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீா்ப்பு என்றாா் அவா்.
பின்னா், பழனியை அடுத்த புதுஆயக்குடியில் தனியாா் திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எனக்கும் முதல்வராக வேண்டும், பிரதமராக வேண்டும் என கனவு உண்டு. ஒரு புள்ளியை மட்டும் வைத்து கோலம் போட முடியாது. அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியாது.
இப்போது புதிய கட்சி தொடங்கியவுடனேயே முதல்வராகிவிட வேண்டும் என கனவு காண்கின்றனா். அது அவா்களது விருப்பம்.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது என்றாா் அவா்.
முன்னதாக, பழனி கிரி வீதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் திருமாவளவனைச் சந்தித்து, தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.