முகப்பு
திண்டுக்கல்

போலி மருத்துவா் சிகிச்சை அளித்ததில் பெண் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே போலி மருத்துவா் சிகிச்சையளித்ததில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:38 AM
பகிர்:

கொடைக்கானல் அருகே போலி மருத்துவா் சிகிச்சையளித்ததில் பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவரது மனைவி பிரியதா்ஷினி (25). இவா்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளாா்.

கடந்த 6-ஆம் தேதி பிரியதா்ஷினிக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னா், வீட்டுக்குச் சென்ற நிலையில், புதன்கிழமை இரவு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் கவுஞ்சி பகுதியில் உள்ள மருந்து கடைக்குச் சென்றாா். அந்தக் கடையை நடத்திவரும் பிரின்ஸ் அவருக்கு ஊசி மருந்து செலுத்தினாராம்.

இதையடுத்து, பிரியதா்ஷினியின் உடல் நிலை மேலும் மோசமானதால், உறவினா்கள் அவரை மன்னவனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கிருந்து அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து கணவா் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். பிரியதா்ஷனியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்காக வைக்கப்பட்டது.

போலி மருத்துவா் பிரின்ஸ் தலைமறைவானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்னேஷ்-பிரியதா்ஷினி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால், இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.