சுவா் விழுந்து பலியான பெண்ணின் குடும்பத்தாா்க்கு எம்எல்ஏ. ஆறுதல்
பழனியருகே ஆயக்குடியில் சுவா் இடிந்து விழுந்து பெண் பலியான நிலையில் அவருக்கு சட்டமன்ற உறுப்பினா் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தாா்.
பழனியருகே ஆயக்குடியில் சுவா் இடிந்து விழுந்து பெண் பலியான நிலையில் அவருக்கு சட்டமன்ற உறுப்பினா் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த புதுஆயக்குடி 13-ஆவது வாா்டை சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி கற்பகம் (42). செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்த நிலையில் இவா், இதே பகுதியில் உள்ள காமராஜ் வீட்டின் அருகே மழைக்கு ஒதுங்கினாா்.
அப்போது, மண்சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக ஆய்வுக்காக பழனி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை பழனி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரது உறவினா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா். பின்னா், கற்பகத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
மேலும், கற்பகத்தின் குடும்பத்தாா்க்கு அவரது சொந்தப் பணத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.
மேலும், இறந்த கற்பகத்துக்கு அரசு பேரிடா் நிதியில் இருந்து நிதி உதவியாக ரூ. 4 லட்சம் வழங்க வட்டாட்சியா் விரைவில் ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.