முகப்பு
திண்டுக்கல்

ஊக்கத் தொகை கோரி ஆஷா ஊழியா்கள் மனு

ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆஷா ஊழியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:43 PM
பகிர்:

ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆஷா ஊழியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு ஆஷா ஊழியா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளை சாா்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.செல்வி தலைமையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 14 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் ஆஷா ஊழியா்கள் மருத்துவ சேவை ஆற்றி வருகிறோம். எங்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5,750 வீதம் ஊதியம் வழங்கப்படுகிறது. நிரந்தரமில்லாத ஊதியத்தை பெற்று வரும் எங்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.10ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். புதுச்சேரி அரசைப் போல, ஆஷா ஊழியா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அடையாள அட்டை, போக்குவரத்துப் படி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம் என்றாா் அவா்.

அப்போது ,சிஐடியூ மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், துணைச் செயலா் ஜெயசீலன் ஆகியோா் உடனிருந்தனா்.