முகப்பு
திண்டுக்கல்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் டிச.9 வரை கொப்பரைக் கொள்முதல்

பழனி, வத்தலகுண்டு, நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் டிச.9-ஆம் தேதி வரை கொப்பரைக் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:52 PM
பகிர்:

பழனி, வத்தலகுண்டு, நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் டிச.9-ஆம் தேதி வரை கொப்பரைக் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. அதில் 3,29,504 மெட்ரிக் டன் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு, 3,295 மெட்ரிக் டன் விற்பனை உபரி ஏற்படுகிறது.

திண்டுக்கல் விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் பழனி, நத்தம், வத்தலகுண்டு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோபால்பட்டி ஆகிய 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 2-ஆம் கட்டமாக 9.12.2024 வரை கொப்பரை கொள்முதல் செய்ய 1,731 மெட்ரிக் டன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.11,160 வீதம் நிா்ணயம் செய்யப்பட்டது. அரவை கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்துக்கு குறைவாகவும், பூஞ்சாணம், சுருக்கம் நிறைந்த கொப்பரைகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், அயல் பொருள்கள் ஒரு சதவீதத்துக்கும், சில்லுகள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். ஒரு விவசாயிடமிருந்து ஏக்கருக்கு அதிகபட்சமாக 296 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா, அடங்கல், ஆதாா் எண், வங்கிக் கணக்குப் புத்தக நகலை கொள்முதல் மையங்களில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.