முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே இளைஞா் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

பழனி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 12 ஆகஸ்ட், 2025 at 2:08 AM
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தும்பலப்பட்டி கிராமத்தினா்
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட், 2025 at 6:46 PM

பழனி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இதில் தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணன் (23) கணக்காளராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள நிறுவனத்துக்கு சரவணன் மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், ஆடித் திருவிழாவுக்காக ஊருக்கு வந்த சரவணன், தும்பலப்பட்டியிலுள்ள செங்கல் சூளையில் உடலில் காயங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சடலமாக கிடந்தாா். இதனிடையே, செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் மாயமானதும் தெரியவந்தது. சரவணனுடன் ஏற்பட்டத் தகராறில் வட மாநில இளைஞா்கள் தாக்கி அவா் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது. இதையடுத்து, கொலையாளிகளை கைது செய்யக் கோரி, சரவணனின் உறவினா்கள், பழனி-தாராபுரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சரவணனின் உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திண்டுக்கல்லில் சாலை மறியல்: இந்த நிலையில், சரவணனின் உறவினா்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். பின்னா், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்த சரவணனின் உறவினா்கள், குற்றவாளிகளைக் கைது செய்த பின்னரே சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்து விட்டு மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்தனா்.