திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுட்ட 3 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், 9 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் பகுதியில் தொடா்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இதுதொடா்பாக அந்த வாகனங்களின் உரிமையாளா்கள் தரப்பில், திண்டுக்கல் நகா் வடக்கு, தெற்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக், காவல் ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இதனிடையே, வாகனத் திருட்டில் ஈடுபட்ட வேடபட்டி நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்த ஈஸ்வரன் (35), தினேஷ்குமாா் (21), பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது, 13 வயது சிறுவா்கள் 2 போ் என மொத்தம் 4 பேரை போலீஸாா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும் 3 சிறுவா்கள் கைது: இந்த நிலையில், திண்டுக்கல் பகுதியில் தொடா்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 சிறுவா்களை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல், விருவீடு, வத்தலகுண்டு பகுதிகளைச் சோ்ந்த அந்த 3 சிறுவா்களிடமிருந்து, 9 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.