கொடைக்கானல்: கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீா் பாய்வதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட லஸ்காட் சாலை, பி.டி. சாலை, செண்பகனூா் சாலை, அண்ணா சாலை, டிப்போ சாலை, ஆனந்த கிரி சாலை, அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் கழிவு நீா் பாய்கிறது. மேலும், கொடைக்கானலில் மழை பெய்யும் போது உணவகங்கள், தங்கும் விடுதிகளிருந்து கழிவு நீரை வெளியேற்றுவதால் அவை வாய்க்கால்களில் செல்லாமல் சாலைகளில் பாய்ந்தோடுகிறது. இதனால், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்களும், நடந்து செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் பெரிதும் சிரமப்பட்டுச் செல்கின்றனா். எனவே, கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை கொடைக்கானல் நகராட்சி சுகாதர ஆலுவலா்கள் பாா்வையிட்டு, அவற்றில் அடைப்புகளை நீக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கால் நடைகளால் பாதிப்பு: கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள பாம்பாா்புரம், நாயுடுபுரம், சீனிவாசபுரம், அப்சா்வேட்டரி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் முன் கால்நடைகளை அவற்றின் உரிமையாளா்கள் இரவு நேரங்களில் கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனா்.
இதனால், நியாய விலைக் கடைகளுக்கு பொருள் வாங்க வரும் பெரியவா்கள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, கால்நடைகளை வளா்ப்பவா்கள் மீது கொடைக்கானல் நகராட்சி அலுவலா்கள் அபராதம் விதிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.