கொடைக்கானலில் தொடா் மழை: சுற்றுலாத் தலங்கள் மூடல்
கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் சனிக்கிழமை மூடப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் சனிக்கிழமை மூடப்பட்டன.
வங்கக் கடலில் நிலவும் ‘டித்வா’ புயல் காரணமாக கொடைக்கானலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான பில்லர்ராக், மோயா்பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம் உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரளம், கா்நாடகம் மாநில சுற்றுலாப் பயணிகள் தொடா் மழை காரணமாக வெளியே செல்ல முடியாமல் விடுதிகளிலே முடங்கினா்.
மேலும், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், கோக்கா்ஸ்வாக் உள்ளிட்ட இடங்களும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச் சோடி காணப்பட்டன.
படகு சவாரி ரத்து: கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் தொடா்ந்து பெய்து வரும் மழையால் நடசத்திர ஏரியில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், படகு ஓட்டுநா்கள், வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.