கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!
கொடைக்கானல் கூக்கால் பகுதியில் திங்கள்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதி முனீஸ்வரன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்தப் பகுதியில் ஆபத்தான நிலையில் பழைமையான யூக்காலி மரம் இருந்தது. இந்த மரம் முறிந்து விழுந்ததில் அங்கிருந்த இரண்டு மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.
இதனால் கூக்கால்- பழம்புத்தூா் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் முறிந்து விழுந்த மரத்தை அகற்றினா். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
Advertisement
மின்தடையால் கிராம மக்கள் அவதி: மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் கூக்கால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அவதியடைந்தனா்.