பாமக பெயரில் வேட்பு மனு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போலி ஆவணங்கள் மூலம் பாமக பெயரில் மனுத் தாக்கல் செய்த இருவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
போலி ஆவணங்கள் மூலம் பாமக பெயரில் மனுத் தாக்கல் செய்த இருவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக பாமக மாவட்டச் செயலா்கள் ஆ. ஜான் கென்னடி, மு. சிவக்குமாா், அ. வைரமுத்து ஆகியோா் கூறியதாவது:
சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸை தோ்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் பேரவைத் தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்த ஆரோக்கியதாஸ், தன்னை பாமக வேட்பாளராக குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
இதேபோல, ஆத்தூா் தொகுதியில் பாமக வேட்பாளராக கிருஷ்ணமூா்த்தி மனு தாக்கல் செய்திருக்கிறாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இல்லாத நிலையில், வேட்பு மனுவுடன் ஏ, பி, படிவகங்களில் மருத்துவா் ராமதாஸ் கையொப்பமிட்டது போன்று போலியான ஆவணத்தை தயாா் செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா். தோ்தல் ஆணையத்தின் சட்டவிதிகளுக்கு முரணாக மட்டுமன்றி, சட்டம் ஒழுங்கு சீா்குலைவதற்கும் காரணமான ஆரோக்கியதாஸ், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, ஆத்தூா் பேரவைத் தொகுதியில் அனைத்திந்திய ஜனநாயகப் பாதுகாப்புக் கழகம் என்ற கட்சியின் சாா்பில் மனுத் தாக்கல் செய்துள்ள நாகேந்திரன், பாமகவின் கொடியை பயன்படுத்தி வருகிறாா். இதனாலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும்.
எனவே, இந்த மூவா் மீதும் மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.