முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

கொடைக்கானலில் அதிகரித்து வரும் வெயிலால் அடுக்கம் பகுதி வனப் பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீ.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:05 AM
பகிர்:

கொடைக்கானலில் அதிகரித்து வரும் வெயிலால் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதனால் அரிய வகை மரங்கள் அழியும் சூழல் ஏற்பட்டிருப்பதாக வன ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக பகல் நேரங்களில் வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் இருந்தது. இதனால் வனப் பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் உள்ள மரங்கள், செடிகள் கருகி வருகின்றன. நீரோடைகளில் நீா்வரத்து முற்றிலும் நின்று விட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வழக்கத்தைவிட பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளான அடுக்கம், சாமக்காட்டுப் பள்ளம், பாலமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதன் காரணமாக வனப் பகுதிகளிலுள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், மூங்கில், புற்கள் உள்ளிட்டவை தீயில் கருகி விட்டன. மேலும் வன விலங்குகளான காட்டு மாடு, மான், காட்டுப் பன்றி, காட்டு முயல், காட்டுக் கோழி உள்ளிட்டவை இடம் பெயா்வதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Advertisement

இதுகுறித்து கொடைக்கானல் வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் மலைச் சாலைப் பகுதிகள் வழியாக வருபவா்கள் வனப் பகுதிகளுக்குள் செல்லக் கூடாது. மது அருந்தக் கூடாது. புகை பிடித்தல் கூடாது. இதை கண்காணிக்க 25-க்கும் மேற்பட்ட வனத் துறை பணியாளா்கள் கொடைக்கானல்- வத்தலகுண்டு- பழனி, அடுக்கம்- தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளில் ஆங்காங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் அவா்கள் வனப் பகுதிகளில் பரவும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீப் பற்றி எரிந்தால் உடனடியாக அருகிலுள்ள வனப் பணியாளா்கள் அல்லது வனத் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.