தச்சுத் தொழிலாளியை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் சிறை
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தச்சுத் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
ஓடைப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (53). தச்சுத் தொழிலாளியான இவா் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் செல்வது வழக்கம். இதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு நத்தம் அருகேயுள்ள வலையபட்டி புதூருக்கு வேலைக்குச் சென்றாா். அப்போது, அந்தச் ஊரைச் சோ்ந்த பாப்பாத்தி (55) என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூருக்கு அழைத்து வந்து இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ராஜமாணிக்கம் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து கள்ளிமந்தயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில் அவருடன் இருந்த பாப்பாத்தி அவரைக் கொலை செய்தது உறுதியானது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட பாப்பாத்திக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து, நீதிபதி மலா்விழி தீா்ப்பளித்தாா்.