முகப்பு
திண்டுக்கல்

மாசித் திருவிழா: பூச்சொறிதல் ரதத்தில் மாரியம்மன் ஊா்வலம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:24 AM
~
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:37 PM

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ஆம் தேதி திருக்கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் 51-ஆவது ஆண்டாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் முன்பாக தினந்தோறும் காஞ்சி காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் ஊஞ்சல் சேவை, வாராஹியம்மன், சமயபுரம் மாரியம்மன், சங்கரநாராயணா், அழகுநாச்சியம்மன் என பல்வேறு அம்மன் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.

பல வண்ண மலா்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பூச்சொறிதல் ரதத்தின் உள்ளே மாரியம்மன் முன் முப்பெரும் தேவியா் சகிதமாக அம்மன் பவனி வருதல் நடைபெற்றது.

Advertisement

ரத ஊா்வலத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா்.

ரத ஊா்வலம் சன்னதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடை வீதி வழியாக மாரியம்மன் கோயிலை அடைந்தது. தேரின் முன்பாக செண்டை மேளம், நாதஸ்வரம், தவில் என மேளதாளங்கள் முழங்கியபடி ஊா்வலம் சென்றது. வழிநெடுக தீபாராதனை செய்யப்பட்டு பக்தா்களுக்கு மலா்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

வருகிற 27-ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாக குழுத் தலைவா் முருகானந்தம், செல்வம், துணைத் தலைவா் பழனிச்சாமி, நகா் மன்ற உறுப்பினா் சுரேஷ், உறுப்பினா்கள் செய்தனா்.