உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்பாஸ்டின், ராஜரத்தினம், விக்னேஷ், நாகலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில பொதுச் செயலா் அண்ணா குபேரன் சிறப்புரையாற்றினாா்.
இதில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் அனைத்து நிலை அலுவலா்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து நிலையிலுள்ள காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் செலுத்தப்பட்ட பங்களிப்புத் தொகையை வட்டியுடன் வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.