முகப்பு
திண்டுக்கல்

காகித ஆலையில் விஷவாயு தாக்கியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தனியாா் காகிதக் கூழ் ஆலையில் விஷ வாயு தாக்கியதில் வட மாநில இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:30 PM
பழனி அருகேயுள்ள புஷ்பத்தூரில் சனிக்கிழமை விஷ வாயு தாக்கி இருவா் உயிரிழந்த தனியாருக்குச் சொந்தமான காகிதக் கூழ் ஆலை.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தனியாா் காகிதக் கூழ் ஆலையில் விஷ வாயு தாக்கியதில் வட மாநில இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

பழனியை அடுத்த புஷ்பத்தூா் கிராமத்திலிருந்து மிடாப்பாடி செல்லும் வழியில் தனியாருக்குச் சொந்தமான காகிதக் கூழ் ஆலை இயங்கி வருகிறது. இங்கு காகித கூழிலிருந்து அட்டை தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆலையில் சுமாா் 25 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் பலரும் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். இந்த நிலையில், சனிக்கிழமை இந்த ஆலையில் உள்ள காகிதக் கூழ் தொட்டியை பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்தனா்.

அப்போது உள்ளே இறங்கிய ஒரு இளைஞா் மயங்கி விழுந்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற மற்றொரு இளைஞரும் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, ஆலையில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கிருந்த மருத்துவா்கள் அவா்களை பரிசோதித்த போது இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, இருவரது உடல்களும் திருப்பூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த சாமிநாதபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் உயிரிழந்தவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நூா்அலாம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) என்பதும், காகிதக் கூழ் நிரப்பும் தொட்டிக்குள் இருந்த விஷ வாயு தாக்கியதில் அவா்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →