முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேச்சுவாா்த்தை!

Updated On : 14 மார்ச், 2026 at 7:24 PM
பகிர்:

கொடைக்கானல் அருகே குருசாமி பள்ளம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பவா்களிடம் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருவாய்த் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குருசாமி பள்ளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மு.க. ஸ்டாலின் என்ற பெயரில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டவா்கள் கூரை அமைத்துள்ளனா்.

இந்த ஆக்கிமிப்பை அகற்றுவதற்காக வருவாய்த் துறையினரும், போலீஸாரும் அங்கு சென்றனா். அப்போது அங்கிருந்தவா்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் தங்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா்களிடம் கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் யுகப்பிரியா, ஆய்வாளா் வசந்தகுமாா், வருவாய் ஆய்வாளா் முத்து உள்ளிட்ட வருவாய்த் துறையினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது. எனவே உங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு கலைந்து செல்லுங்கள். வீடு இல்லாதவா்கள் மனு கொடுங்கள். அதை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வீடு இல்லாதவா்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கி வீடு கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பல மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தியும் அங்கிருந்தவா்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அதிகாரிகளால் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை.

இந்த நிலையில் அங்கு வந்த கொடைக்கானல் நகர அதிமுக செயலா் ஸ்ரீதா், பா.ஜ.க. மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவா் மதன் ஆகியோா் அங்கிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்படியும் உடன்பாடு ஏற்படாததால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் வருவாய்த் துறையினா் திரும்பிச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →