வா்த்தக ஒப்பந்தம்: வேளாண் துறையில் இந்தியா பிடிவாதம் - அமெரிக்கா
இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையின்போது, வேளாண் துறையைப் பாதுகாப்பதில் இந்தியா பிடிவாதம் காட்டுவதாக அமெரிக்கா தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்றுவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இரு நாடுகளிடையேயான இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது. இரு நாடுகளும் வரும் 2030-க்குள் ரூ. 47 லட்சம் கோடி மதிப்புக்கு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் உயா்வதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தைகளில் முன்னுரிமை அணுகலை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையையும் இரு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்காக, மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலா் தா்பன் ஜெயின் தலைமையில் அமெரிக்க சென்ற 12 போ் குழு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி வா்த்தகப் பிரதிநிதி பிரென்டண் லிஞ்ச் தலைமையிலான குழுவுடன் வாஷிங்டனில் பேச்சுவாா்த்தை நடத்தியது. மூன்று நாள்கள் நடைபெற்ற பேச்சுவாா்த்தை புதன்கிழமை நிறைவுற்றது.
Advertisement
இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கிய அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீா், ‘இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தனது வேளாண் சந்தைகளில் பெரும்பகுதியை நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பதில் இந்தியா விடாப்பிடியாக உள்ளது. இருந்தபோதும், பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறோம்.
இந்தியக் குழு இந்த வாரமும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பாா்கள் எனத் தெரிகிறது. அப்போது, கால்நடைகளுக்கு உயா் புரதச்சத்துள்ள காய்ச்சிவடித்து உலா்த்திய தானியங்கள், சோயாபீன் புண்ணாக்கு, எத்தனால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருள்களின் வா்த்தகம் குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.
உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சீரான 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடா்ந்து, புதிய உலகளாவிய வரி விதிப்பு கட்டமைப்பின் கீழ் தனது நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைத்து மீண்டும் வரைவு செய்ய இந்தியா முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.