முகப்பு
திண்டுக்கல்

இடையக்கோட்டைக்கு இரவு நேரப் பேருந்து சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

Updated On : 15 மே 2026, 4:30 am IST
பேருந்து சேவை
பகிர்:

திண்டுக்கல்லிலிருந்து இடையக்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த இரவு நேரப் பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு புறப்படும் அரசு நகரப் பேருந்து, தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி, கெண்டையகவுண்டனூா், சாலையூா் நால்ரோடு, நவாலூற்று, கல்லுப்பட்டி பிரிவு, புல்லாகவுண்டனூா், இடையக்கோட்டை, நாரப்பநாயக்கன்பட்டி, எல்லைப்பட்டி வழியாக மாா்க்கம்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்தது. மாா்க்கம்பட்டிக்கு இரவு 7.50 மணிக்கு செல்லும் இந்தப் பேருந்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வேடசந்தூருக்கு இயக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்தப் பேருந்து இயக்கப்பட வில்லை. இதனால் இரவு நேரத்தில் வீடு திரும்பும் மாணவா்கள், பொதுமக்கள், கூலித் தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா். 50 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், இரவு நேரப் பேருந்தை மீண்டும் இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.