100 நாள் வேலை வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
வேடசந்தூா் அருகே 100 நாள் பணி வாய்ப்பு வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மூதாட்டிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
வேடசந்தூா் அருகே 100 நாள் பணி வாய்ப்பு வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மூதாட்டிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராமபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், முதியோா் 100 நாள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தனா். இவா்களுக்கு கடந்த பல மாதங்களாக பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மூதாட்டிகளின் கண் கருவிழி ரேகைப் பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டதை அடுத்து, அரசு மருத்துவரிடம் சென்று கண்ணில் எவ்வித பாதிப்பும் இல்லை என சான்றிதழ் வாங்கி வந்தால் பணி வாய்ப்பு வழங்கப்படும் என ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிா்ச்சியடைந்த மூதாட்டிகள், வயதான காலத்தில் திண்டுக்கல்லுக்குச் சென்று சான்றிதழ் பெறுவது தங்களுக்கு சாத்தியமில்லை என தெரிவித்தனா். மேலும், தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 100 நாள் பணி வாய்ப்பை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, பூத்தாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுயிட்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஊராட்சிச் செயலா் சத்தியமூா்த்தி, போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டிகளின் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அரசு உத்தரவுப்படி, கண்கள் செயல்திறன் குறித்து மருத்துவரின் சான்றிதழ் பெறுவது அவசியம். சான்றிதழ் பெற்று வருவோருக்கு 100 நாள் பணி ஒதுக்கீடு வரப்பெற்றவுடன், பணி வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.