துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மதுரை மாநகராட்சி சிறப்பு மாமன்றக் கூட்டம் ஆணையர் அனீஷ் சேகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை ஆணையர் ப.மணிவண்ணன், நகரப் பொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையர் (கணக்கு) கருப்பையா, நகர் நல அலுவலர் சதீஷ்ராகவன், உதவி ஆணையர்கள் பழனிசாமி, அரசு, கெளசலாம்பிகை, செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தவும் இதற்கான செலவினத்தை மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளவும் அரசுக்கு கருத்துரு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் எங்கெல்லாம் பொது கழிப்பறை வசதி உள்ள என்பது கூகுள் வரைபடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் கொசு ஒழிப்புப் பணிக்காக ரூ.55 லட்சம் செலவில் கொசு ஒழிப்பு புகை பரப்பும் மருந்து கொள்முதல் செய்ய இக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் நிரந்தரம், தொகுப்பூதியம், தினக்கூலி துப்புரவுப் பணியாளர்கள் 2,413 பேருக்கு ஒளிரும் பட்டையுடன் கூடிய தலா 2 டி.சர்ட் ரூ.20 லட்சத்தில் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.