மதுரையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடித்த போலீஸார் மற்றும் பிடிக்க உதவிய பொதுமக்களுக்கு மாநகர் காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
குருவிக்காரன் சாலையில் முத்துவேல் என்பவர் நடந்து சென்றபோது அவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த ஓட்டுநர் சுரேஷ், செவிலியர் பிரியதர்ஷினி ஆகிய இருவரும், செல்லிடப்பேசியை பறித்துச்சென்ற இருவரையும் பிடிக்க உதவி செய்தனர். அதே போன்று மதுரை கீழநாப்பாளையம் பகுதியில் தீபா என்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறித்துச்சென்ற கீரைத்துறையைச் சேர்ந்த ராஜா(22) என்பவரை பிடிக்க சிறுவன் சுதர்ஸன்(14) மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சின்னான், அய்யனார் ஆகியோர் உதவினர். குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய 5 பேருக்கும் மகேஷ்குமார் அகர்வால் திங்கள்கிழமை பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.
ஆயுதங்களுடன் சுற்றிய கும்பலில் ஒருவர் கைது: மதுரை தெப்பக்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு காரில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் சுற்றியலைவதாக தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாரைக் கண்டவுடன் காரில் இருந்தவர்கள் தப்பியோடினர். அவர்களை சார்பு- ஆய்வாளர் சக்திமணிகண்டன், தலைமைக்காவலர்கள் காதர் இப்ராஹிம் ஷா, அன்பு, முருகன், தெப்பக்குளம் போக்குவரத்து சிறப்பு சார்பு- ஆய்வாளர் சின்ன கருத்தப்பாண்டி ஆகியோர் விரட்டிச் சென்றனர். இதில்,வண்டியூர் வேல்முருகனை(27) பிடித்துக் கைது செய்தனர். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடித்த போலீஸாரையும் ஆணையர் பாராட்டினார்.