மதுரை

மலேசிய மணலை தமிழகத்தில் அனுமதியின்றி விற்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்

DIN

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழகத்தில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்ய  முடியாது என  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு  செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
   புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம், மலேசியாவில் இருந்து 53 ஆயிரத்து 334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்தது. இந்த மணல்தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
 இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மணலை விடுவிக்க உத்தரவிடக்கோரி, மணல்
இறக்குமதி செய்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்ஆர்எம் ராமையா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், மணலை வெளியே எடுக்க முடியாததால் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி முதல் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு வாடகையாக நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் செலுத்தி வருகிறோம். இதனால் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இறக்குமதி செய்த மணலை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், லாரிகளை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தமிழகத்தில் மணலை விற்பனை செய்ய முறையான அனுமதி பெறவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே தான் துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதற்கு மறுப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், நாங்கள் மத்திய அரசின் அனுமதியுடன், சட்ட ரீதியாக ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி
மணலை இறக்குமதி செய்துள்ளதால் சட்டவிரோதம் எனக்கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
 அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலாக இருந்தாலும், தமிழகத்தில் அதை விற்பனை செய்வதற்கான விற்பனையாளர் உரிமம், மணலை இருப்பு வைக்கும் இடம், பரிமாற்றம் மற்றும் போக்குவரத்துக்கான உரிமம் உள்ளிட்டவற்றை மனுதாரர் பெறவில்லை. எனவே தான் தமிழகத்தில் மணலை விற்பனை செய்யவோ, துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார்.
கேரளத்துக்கு கொண்டு செல்ல முடிவு:  இதையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மணலை தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்காத பட்சத்தில், அதை கேரளத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். இதை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு  (நவம்பர் 15) ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT