மணல் கடத்தலை தடுத்த சார்பு-ஆய்வாளர், காவலர் மீது வேனை ஏற்ற முயற்சி
மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்திய வேனை தடுக்க முயன்ற சார்பு- ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வேனை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்திய வேனை தடுக்க முயன்ற சார்பு- ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வேனை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.
காடுபட்டி அருகே வைகையாற்றில் வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக காடுபட்டி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு- ஆய்வாளர் தனபாலன், காவலர் பெரிய மாயன் ஆகியோர் காடுபட்டி வைகையாற்றுக்குச் சென்றனர். ஆற்றங்கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த வேனை நிறுத்த முயன்றனர். அப்போது வேனை நிறுத்தாத ஓட்டுநர், சார்பு ஆய்வாளர், காவலர் மீது வேனை மோத முயன்றார். இருவரும் அங்கிருந்து விலகிச்சென்றதால் உயிர் தப்பினர். அங்கிருந்த தப்பிச்சென்ற வேனை இருவரும் இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்றனர். போலீஸார் விரட்டி வருவதை அறிந்த ஓட்டுநர் சோழவந்தான் சாலையில் வேனை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டார். வேனை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் மணல் இருப்பது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.