மதுரை மாநகராட்சியில் உபரி நிதி நிலை அறிக்கை தாக்கல்
மதுரை மாநகராட்சியின் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை உபரி நிதியுடன் ஆணையரும், தனி அலுவலருமான அனீஷ்சேகர் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
மதுரை மாநகராட்சியின் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை உபரி நிதியுடன் ஆணையரும், தனி அலுவலருமான அனீஷ்சேகர் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
மாநகராட்சி கூட்டரங்கில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை மாநகராட்சியின் 2018-19 ஆம் ஆண்டுக்கான மொத்த நிதி வருவாய் ரூ.2166.81 கோடியாகும். மொத்த செலவினம் ரூ.2164.89 கோடியாக உள்ளது. அதனடிப்படையில் நிதி இருப்பு உபரியாக ரூ.1.92 கோடி இருக்கும்.
மத்திய, மாநில அரசுகளின் மானியம் மற்றும் மாநகராட்சி பங்களிப்புடன் அம்ருத் திட்டத்தின் கீழ் மூலதன பணிகளுக்கு (பொலிவுறு நகர்த்திட்டம்) ரூ.1164.82 கோடியில் பணிகள் நடைபெறவுள்ளன.அதன்படி கலாசார மையம், பெரியார் பேருந்து நிலைய சீரமைப்பு, அடுக்குமாடி பேருந்து நிறுத்துமிடம், சுற்றுலா தகவல் மையம், வைகை ஆற்றோரம் சீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அம்ருத் திட்டத்தில் 6 பூங்காக்கள் ரூ.2.22 கோடியில் பராமரிக்கப்பட்டுள்ளன. மேலும் 6 பூங்காக்கள் ரூ.3.22 கோடியில் பராமரிக்கப்படவுள்ளன.
மதுரை மாநகராட்சிக்கான குடி நீர் தேவைக்கு முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு ரூ.1140 கோடியில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. கோச்சடையில் லாரி நிறுத்துமிடம் ரூ.3 கோடியில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வசதிகள் நிதி மூலம் மூன்றுமாவடி முதல் தபால் தந்தி நகர் வரை புதிய சாலை, தரைமட்டப் பாலம், குருவிக்காரன் சாலை, அப்போலோ சந்திப்பு ஆகியவற்றில் மேம்பாலம், பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு ஆகிய பணிகள் ரூ.109.98 கோடியில் சீரமைக்கப்படவுள்ளன.
ரயில் நிலையம் முதல் மகால் வரை பாரம்பரிய நடைபாதை அமைக்க பொதுமக்கள் கருத்துக் கேட்கப்படவுள்ளது. நடைபாதை சாலைகளில் வாகனம்
செல்ல தடை விதிக்கப்படும்.
மாநகராட்சியில் தாள் இல்லா நிர்வாகம் அடிப்படையில் கணினி முறை முழுமையாகச் செயல்படுத்தப்படும். பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு செயல்படுத்தப்படும். பயணிகள் நிழற்குடைகள் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் நவீனமயமாக்கப்படும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் தனியார் நிறுவன உதவியுடன் ரோபாடிக் ஆய்வக அறை வசதி, மிடுக்கான வகுப்பறை வசதி
செய்து தரப்படும். மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்த செல்லமுத்து அறக்கட்டளையுடன் இணைந்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆலோசனை மையம் அமைக்கப்படும். அதற்காக
ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மருத்துவமனை மேம்பாட்டு பணிகள் சுகாதார திட்ட நிதியில் வழங்கப்படவுள்ளது. அதன்படியே சுகாதாரத்துறை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மதுரை மாநகராட்சியில் வரி வசூல் மார்ச் வரை 82 சதவிகிதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் வரை குடிநீர் பிரச்னை எழாது என்றார்.