மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் சடலத்தை கொடுக்க பட்டாசு அன்பளிப்பை கட்டாயப்படுத்தி கேட்டு வாங்கிய ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்உடல்நலக்குறைவால்மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இவரது சடலம் பிணவறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜேந்திரனின் சடலத்தை பரிசோதனை செய்து ஒப்படைக்க பட்டாசு பார்சலை அன்பளிப்பாக வாங்கி வரும்படி பிணவறை ஊழியர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இதையடுத்து,ராஜேந்திரனின் உறவினர்கள் ரூ.1500-க்கு பட்டாசு வாங்கி கொடுத்துள்ளனர்.
இதில், பட்டாசு பார்சலை ராஜேந்திரனின் உறவினர்கள் பிணவறைக்குள் சென்று ஊழியர்களிடம் கொடுக்கும் விடியோ காட்சிகள் வெளியாகின.
இதுதொடர்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மருத்துவமனை டீன் டி.மருதுபாண்டியன் வெள்ளிக்கிழமை கூறியது: இறந்தவர் சடலத்தை ஒப்படைக்க பட்டாசு அன்பளிப்பு கேட்டது தொடர்பாக அங்கு பணியில் இருந்த 4 பணியாளர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் பட்டாசு அன்பளிப்பு பெற்றவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.