மதுரை வைகையாற்றில் புராதன சிறப்பு வாய்ந்த மைய மண்டபம் சீரமைப்பு பணி என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை வைகையாற்றில் கல்பாலம் அருகே ஆற்றின் நடுப்பகுதியில் மைய மண்டபம் உள்ளது. புராதன சிறப்பு மிக்க இந்த மைய மண்டபம் பராமரிப்பு இல்லாததால் நாளுக்கு நாள் பொலிவிழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மைய மண்டபத்தை புதுப்பிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைய மண்டபத்தை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைகளின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு மைய மண்டப சீரமைப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மைய மண்டபம் செவ்வாய்க்கிழமை முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மைய மண்டபம் தரைமட்டமாக்கப்பட்டது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மைய மண்டபத்தில் உள்ள தூண்கள் அப்படியே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மைய மண்டபத்தின் அஸ்திவாரம் முற்றிலும் சிதைந்துள்ளது. எனவே அஸ்திவாரத்தை அகற்றி புதிதாக அஸ்திவாரம் போடப்பட்ட பின்னரே மைய மண்டபம் ஏற்கெனவே இருந்தவாறு புதிதாக அமைக்கப்படும். இந்த பணிக்காக அஸ்திவாரம் அகற்றப்பட்டுள்ளது என்றனர்.