தென் மண்டல காவல் சரகத்தில் 59 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து, தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென் மண்டல காவல் சரகத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் 59 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், மதுரை தாலுகாவில் பணியாற்றிய 23 காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை, போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 25 பேர் திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து 34 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, மதுரை மாநகருக்கு 27 காவல் ஆய்வாளர்களும், திருநெல்வேலி சரகத்துக்கு 7 காவல் ஆய்வாளர்களும் என மொத்தம் 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றம் குறித்து டி.ஐ.ஜி. மற்றும் ஆணையர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்து, பணியில் சேருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.