மேலூர் அருகே கோயில் காளைக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக, பொதுமக்கள் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
கீழவளவை அடுத்த பனையம்பட்டியிலுள்ள பட்டத்தரசியம்மன் கோயிலில் காளை வளர்க்கப்பட்டு வந்தது. சுமார் 7 வயதுள்ள இக்காளை, கிராமத்தைச் சுற்றியுள்ள நிலங்களில் பயிர்களை மேய்ந்து அழிப்பதாக, சிலர் கிராமப் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்தக் காளையை கடந்த 10 நாள்களாக கட்டி வைத்திருந்துள்ளனர். ஆனால், சனிக்கிழமை அதிகாலையில் காளை கயிற்றை அறுத்துக்கொண்டு வயல் பகுதிக்கு சென்றுவிட்டதாம். சிறிது நேரத்தில், வாயில் நுரை தள்ளியபடி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளது.
இது குறித்து கிராமப் பொதுமக்கள் கீழவளவு காவல் நிலையத்தில், கோயில் காளை விஷம் வைத்து கொல்லப்பட்டதாகப் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கீழவளவு கால்நடை மருத்துவர் உதவியுடன் காளையை பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காளைக்கு விஷம் வைத்தவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.