உசிலம்பட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, பால் வியாபாரி தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள பொம்மம்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (34). பால் வியாபாரி. இவர், தனது மனைவி சுவேதா (23), குழந்தைகள் பிரசன்னா (4), சுதர்சன் (2) ஆகிய நான்கு பேருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதனால் மனவேதனை அடைந்த பாலமுருகன் விஷமருந்தை தானும் குடித்து விட்டு மனைவி சுவேதா மற்றும் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனால் வீட்டில் மயங்கிய நிலையில் நான்கு பேரும் கிடந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர்கள் இவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.