மதுரை வைகையாற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் ஆற்றில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை வைகையாற்றில் கல்பாலம் அருகிலும் மற்றும் ஓபுளா படித்துறை பாலம் அருகிலும் மாநகராட்சியின் சார்பில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்ற போதே அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வைகையாற்றின் பல இடங்களில் கழிவு நீர் கலப்பதால் வைகையாறு முழுவதும் கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தாமல் தடுப்பணை கட்டுவது பலனளிக்காது.
தடுப்பணைகள் கட்டப்பட்டு விட்டால் அதில் கழிவுநீர் தேங்கி கழிவுநீர் வாய்க்கால் போல மாறிவிடும். மேலும் இதன்மூலம் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் ஆற்றின் இருகரைகளிலும் உள்ள குடியிருப்புகளில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது கட்டப்பட்டுள்ள இரு தடுப்பணை பகுதியிலும் பெரிய அளவில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும் ஆற்றின் வடகரை, தென்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே தடுப்பணை பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்றுவதோடு, வைகையாற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.