மதுரையில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காளவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரை கண்டவுடன் பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பையுடன் தப்ப முயன்றார். அவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
இதில், காளவாசல் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி பாண்டியம்மாள்(50) என்பதும், அவர் கஞ்சா விற்பனைச் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாண்டியம்மாளை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.