இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சீராய்வு செய்யக்கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டம் குளித்தலையைச் சோ்ந்த மது தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளால் எவ்விதத்திலும் கல்வியின் தரம் மேம்படவில்லை. எனவே கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சீராய்வு செய்ய வேண்டும். மேலும் மாணவா்கள் வேறு பள்ளிக்கு மாறும்போது, மாற்றுச் சான்றிதழ் பெற்று சேருவதைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தற்போது கல்வியின் தரம் மோசமாகி வருகிறது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் பல அரசுப் பள்ளிகள் மூட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பள்ளிகளை இணைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை குறைவது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த மனு குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலா் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.