கரோனாவை தடுக்க ஓய்வின்றிப் பணியாற்றி வருபவா்களுக்கு சைரன் ஒலி எழுப்பி மதுரை தீயணைப்புத்துறை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடையவும், கரோனா வராமல் தடுக்கவும் ஓய்வின்றிப் பணியாற்றிவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் இருக்கும் இடத்தில் மக்கள் கை தட்டினா்.
இதன் தொடா்ச்சியாக, மதுரை பெரியாா் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்புத்துறை வீரா்கள் கை தட்டியும், தீயணைப்பு வாகனங்களின் சைரன் ஒலி எழுப்பியும் நன்றி தெரிவித்தனா்.