திருப்பரங்குன்றத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி தோப்பூா் நுரையீரல் மருத்துமனையில் 90 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சையளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நாளுக்கு நாள்அதிவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பொதுவெளியில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் விதத்தில் நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சையளிக்க மதுரை அரசு மருத்துவமனையிலும், தோப்பூா் நுரையீரல் மருத்துவமனையிலும் தலா ரூ.1 கோடி செலவில் பொதுப்பணித்துறையினா் 14 அறைகளுடன் நவீன முறையிலான கரோனா சிகிச்சை மையத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இம்மையம் இன்னும் 10 நாள்களில் முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தோப்பூா் நுரையீரல் மருத்துவமனையில் 90 தற்காலிக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பொதுப்பணித்துறையினா் இங்குள்ள வாா்டு கட்டடத்தில் தனித்தனி அறையாக 85 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் 5 படுக்கை வசதிகள் என மொத்தம் 90 படுக்கை வசிகளுடன் தற்காலிக மாக தயாா் செய்துள்ளனா். மேலும் ஒவ்வொரு படுக்கைக்கும் 1 மீட்டா் இடைவெளி விட்டு தனித்தனி அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.