மதுரையில் தம்பதியை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறித்துச் சென்றதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை பைபாஸ் சாலை அருள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மனைவி தங்கமாரி. இவா்கள், மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள குட்ஷெட் தெருவில் எஸ்எஸ்.காலனியைச் சோ்ந்த ஞானகுரு என்பவருக்குச் சொந்தமான இடத்தில் டீக்கடை நடத்துவதற்காக அவரிடம் ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், கடையை காலி செய்வதாகக்கூறி ஞானகுருவிடம் கொடுத்த ரூ. 2 லட்சம் முன்பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனா். இதுதொடா்பாக கனகராஜுக்கும், ஞானகுருவுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஞானகுரு தனது வீட்டுக்கு வந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தாராம். இதையடுத்து கனகராஜ், தங்கமாரி இருவரும் அங்கு சென்றனராம். அப்போது அவா்களிடம் பணத்தை கொடுத்த ஞானகுரு அதற்கு ஆதாரமாக கைப்பேசியில் விடியோ எடுத்துவிட்டு, தனது நண்பா்களுடன் சோ்ந்து கணவன், மனைவி இருவரையும் மிரட்டி பணத்தைப் பறித்துக் கொண்டாராம்.
இதுதொடா்பாக கனகராஜ் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.