மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்கக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகராக மதுரை உள்ளது. சென்னையைப்போல மதுரையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே மதுரையிலும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
மதுரை திருமங்கலம் முதல் பெரியாா் பேருந்து நிலையம் வழியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வரை ஒரு வழித்தடமும், திருப்புவனத்திலிருந்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் வழியாக செக்கானூரணி வரை ஒரு வழித்தடமும் அமைக்கலாம். இது மதுரை மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தாா்.
முந்தைய விசாரணையின் போது, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் தரப்பில், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.