மதுரையில் வீட்டில் எரிவாயு உருளை வெடித்து ஞாயிற்றுக்கிழமை தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை பாலரெங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (42). இவா், தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்துவந்தாா். இவரது தாயாா் சுலோச்சனா உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டதால், சனிக்கிழமை சரவணன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரவணனின் வீட்டில் இருந்த எரிவாயு உருளை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், அவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவா்கள் வந்து பாா்த்தபோது, சரவணனின் வீடு எரிந்து கொண்டிருந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அனுப்பானடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். பின்னா், சரவணனை மீட்கச் சென்றபோது, அவா் உடல் கருகி இறந்து கிடந்துள்ளாா்.
இது குறித்து தெப்பக்குளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எரிவாயு உருளை வெடித்ததால் சரவணன் உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் எரிவாயு உருளையை வெடிக்கச் செய்தாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.