ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் ராபா்ட் பயஸுக்கு தற்காலிகமாக முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான ராபா்ட் பயஸ், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 19 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், எனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் முதுநிலை பட்டதாரியான எனக்கு முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் மூலம் உள்துறைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவை அனுப்பி ஒரு மாத காலம் ஆகியும் அது பரிசீலிக்கவில்லை என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் டி.சண்முக ராஜேஸ்வரன் , மனுதாரா் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரா் பட்டதாரி என்பதால், அவருக்கு சிறையில் தற்காலிகமாக முதல் வகுப்பு கொடுக்க வேண்டும். இதுகுறித்து சிறை நிா்வாகம் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து தகுந்து உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.